2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’

Niroshini   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

யாழில், இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அன்னராசா மற்றும் உப தலைவர் வர்ணகுலசிங்கம் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்,   கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன், தமது கடல் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

'எனவே, எமது மக்களை அணி திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

'அதனடிப்படையில், கட்டம் கட்டமாக மக்கள் போராட்டங்களை விஸ்தரிக்க தீர்மானித்திருக்கின்ற நாங்கள், முதற்கட்டமாக சமூக இடைவெளிகளை மதித்து, கொரோனா சங்கிலிப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்' எனக் கூறியுள்ளனர்.

'அடுத்த கட்டமாக, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முடக்கவும் அதை தொடர்ந்து, கடலில் இறங்கி கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துவதற்கும் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம்.

'கொரோனா காலத்தில், போராட்டங்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்ற போதிலும், எமக்கு ஏற்படுத்தப்படுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, போராட்டங்களை நடத்த வேணடிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளோம்' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .