2025 மே 14, புதன்கிழமை

தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

வடக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாக, வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்,  நேற்று (26) மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில், நேற்று  (26), வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இச்சங்கம் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த சங்கத்தின்  உபதலைவர் பா.லக்‌ஷன், இனிவரும் காலங்களில், அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்களைப் போல, தனியார்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பேணும் முகமாக இந்த அமைப்பு செயற்படுமென்றார்.

இந்த அமைப்பு, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, வர்த்தக சங்கம் மற்றும் வேறு பல தடைகள் காரணமாக செயற்பட முடியாதிருந்ததாகத் தெரிவித்த அவர், எனினும்,  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சங்கம், எவ்வித தடை ஏற்படினும், தொடர்ச்சியாகச் செயற்படுமெனவும் கூறினார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தூர இடங்களிலிருந்து வந்து, தனியார் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பெண்கள் 5 மணிக்குப் பின்னரும் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலை காணப்படுவதாகவும், லக்‌ஷன் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொது விடுமுறை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எனினும் தனியார் துறையினருக்கு அவ்வாறான விடுமுறைகள் வழங்கப்படுவதில்லையெனவும் இனிவரும் காலங்களில், இது தொடர்பில், ஊழியர் சங்கம் கூடிய கரிசனை செலுத்துமெனவும் கூறினார்.

சங்கத்தின் தலைவராக, க.சிவகுமாரும் உப தலைவராக, பா. லக்‌ஷனும் செயலாளராக, ர.அஜந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X