2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள்’

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “பெரும்பான்மை அரசாங்கங்கள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடையவாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம், பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்கமனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள பதில்க் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழக் காரணங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ஒரு முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கக் காணி வேண்டும் என்று கேட்டார். நாங்கள் மண்டைதீவில் காணியை அடையாளப்படுத்தினோம். பின்னர் காணியைத் தமக்கு மாற்றித் தரும்படி கேட்டார். வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கிடைக்கப் போகின்றது. ஆகவே காணியை எமது பெயருக்கு மாற்றினால்த்தான் அவர்களுடன் பேசிப் பணம் பெறமுடியும் என்று கூறினார். நாங்கள் தானே நன்மை அடையப் போகின்றவர்கள். எம்முடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தினால்த்தான் பொருந்தும் என்றேன்.

ஏற்கனவே இவ்வாறான கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் வேறு இடங்களில் கட்டப்பட்டு அவை போதுமானவாறு பாவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவேதான் எமது கட்டுப்பாட்டுக்குள் இந்தச் செயற்றிட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

பலமாதகாலம் இது பற்றி எதுவும் அவர் பேச முன்வரவில்லை. மிக அண்மையில் ஆளுநருடனும் யாழ் மாவட்டச் செயலருடனும் அதே காணியைப் பார்க்கப் போயிருந்ததாகப் பத்திரிகையில் வாசித்தேன். காணியை விடுவிக்க அவர்கள் என்னிடம் வரவேண்டும்.

சிலர் வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றார்கள். அதற்கு தனிப்பட்ட நன்மைகளைப் பெற ஏங்குகின்றார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும். உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதேநேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம்.

உதாரணத்துக்கு இன்றைய (31.01.2018) தமிழ் மிரரின் பக்கம் 3 ஐப் பாருங்கள். “வடகிழக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்” என்ற தலையங்கத்தின் கீழ் ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடகிழக்கு மக்களுக்கு நன்மை பயப்பதான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் யாருக்கு இந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க அவர் விருப்பமாக இருக்கின்றார் என்பது புரியும். மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிபெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மொரகஹகந்த திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் மகாவலி நதியின் ஒருசொட்டுநீர் கூட வடமாகாணத்திற்கு இதுவரை வரவில்லை. ஆனால் வரவிருக்கும் நீரைமேற்கோள் காட்டி ‘எல்’வலயம் என்ற வலயத்தைத் திறந்து அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஆகவே வடகிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாயினும் வடகிழக்கில் உள்ள சிங்கள பலவந்தக் குடியேற்றவாசிகளின் நன்மையையே அது குறிக்கின்றது.

அடுத்து இன்னுமொரு நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்னர் மத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் உரிய அறிக்கைகளைப் பெறாது, தக்கதா அந்தச் செயற்றிட்டம் என்பதை ஆராயாமல் எமது தீவகப் பகுதியில் 30 தட்டுகளுக்கும் மேலான அடுக்குமாடிக் கட்டடத்தை சுற்றுலா உணவகத் தங்குமிடத்துக்காக தேர்ந்தெடுத்து அத்திவாரமும் வெட்டத் துணிந்தார். எமது அப்போதைய அமைச்சர்களுக்கு அது தெரியவந்து அந்தச் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டது. முப்பதுக்கு மேற்பட்ட அடுக்குமாடிக்கட்டடத்தை எமது தீவுகளில் கட்டமுயன்றால் தீவுக்கு ஏற்படக் கூடியபாதிப்புக்களை நாம் மிக உன்னிப்பாக ஆராய வேண்டும். பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதைநாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

அரசாங்கம் வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில் செயற்றிட்டங்களை வடமாகாணத்துக்கு வகுக்கின்றார்கள். அதுதவறு. எமது சுற்றுச் சூழல், சீதோஷண நிலை, கலை கலாச்சாரப் பின்னணி, எமது வாழ்க்கைமுறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும். இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது. எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்துத் தமக்குத் தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது. பதவி இருந்தால் எதையுஞ் செய்யலாம் என்ற தப்பவிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு.

எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை. மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளை நாம் பெற்று வருகின்றோம். நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஏன குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .