2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘தொலைக்காட்சி வாங்குவதை விடுத்து நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துங்கள்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

 

“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (31) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது, தொற்றாத நோயின் தாக்கம், எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக, நாள்பட்ட சிறுநீரக நோய்த் தாக்கமுடையவர்கள், அண்மைக்காலமாக அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

“இலங்கையில் எட்டு மாவட்டங்கள், அதிகளவிலான சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அதில், எமது மாகாணத்தில் வவுனியா மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டமும், அதிகளவிலான நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

“இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சுத்தமான குடிநீர் பருகாமையும், ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது. இதற்கமைய, சிறு வயதிலிருந்தே சுத்தமான குடிநீரைப் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில், பாடசாலைகளில் இவ்வாறான இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .