2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம்: மீள்பெற நடவடிக்கை

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என, வட மாகாண சபை உறுப்பினரும் நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடகப் பேச்சாளருமான கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இது விடயமாகக் கலந்துரையாடி, நீதிக்கான வட மாகாணசபை உறுப்பினர்கள் இறுதித் தீர்மானத்தை விரைவில் வெளியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வட மாகாணசபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை குறித்து தன்னுடைய கவனத்தையும் ஆலோசனைகளையும் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து நிற்கின்றார்கள்.

“நீண்ட காலமாக, வட மாகாண சபையில் ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக நீதியான, சுயாதீனமான சட்டபூர்வமான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று, நாம் தொடர்ந்தும் கட்சி பேதமின்றி ஒரே அணியாக நின்று குரல் கொடுத்து வருகிறோம்.

“அதனடிப்படையிலேயே வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. 

“இரா. சம்பந்தனின் அறிவுரைகளையேற்று தன்னுடைய இயற்கை நீதிக்குப் புறம்பான விடயங்களைத் திருத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்கியிருப்பது, நீதிக்கான எமது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் நோக்குகின்றோம்.

“இரா.சம்பந்தனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கடிதத் தொடர்பாடல்களை அவதானிக்கின்றபோது, ஒருவித இணக்கப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையை இப்போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

“இவ்வாறான நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாத் பிரேரணையை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதைப் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்விடயத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் நீதிக்காக குரல்கொடுக்கவும் துணிந்து செயற்படவும், முன்வந்த அனைத்து மாகாணசபை உறுப்பினர்களோடும் இது விடயமாகக் கலந்துரையாடி, நீதிக்கான வட மாகாணசபை உறுப்பினர்கள் இறுதித் தீர்மானத்தை விரைவில் வெளியிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“வட மாகாண சபையின் ஐந்து அமைச்சுகள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்து முறையானதும் சட்டரீதியானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X