2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; அறிக்கைகள் தாமதம்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது நேற்று திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

சந்தேகநபர் ஒருவரின் இரத்தக் கறையுடன் கூடிய காற்சட்டையின் இரத்த மாதிரியுடன் மாணவியின் இரத்த மாதிரி ஒத்துப்போகின்றதா என்ற அறிக்கை, ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கை, சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் மூக்குக்கண்ணாடி தொடர்பான ஆய்வு அறிக்கை, விந்து மாதிரியின் அறிக்கை, மாணவியின் தாயின் இரத்த மாதிரி அறிக்கை உள்ளிட்ட அறிக்கைககளே இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்கு வந்திருந்த வேளையில் தான் கைது செய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸார் தன்னை விடுதலை செய்திருந்த போதிலும் வெள்ளவத்தைப் பொலிஸார் தன்னை மீண்டும் கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த 9ஆவது சந்தேகநபர் நீதவானிடம் தெரிவித்தார்.

அத்துடன், வெள்ளவத்தை பொலிஸாரிடமிருந்து கொடிகாமம் பொலிஸாரே தன்னைப் பொறுப்பேற்றனர் எனவும் நிதிமன்றத்தில் கூறிய சுவிஸ் நாட்;டைச் சேர்ந்த 9ஆவது சந்தேகநபர், இவ்வாறான நடைமுறை எவ்வாறு சாத்தியமாகும் எனவும் நீதவானிடம் கேள்வியெழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த நீதவான், 'குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை இலங்கையின் எப்பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸாரும் கைது செய்ய முடியும். குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸார் தான் கைது செய்ய வேண்டும் என்ற சட்டவரையறை இல்லை' என்றார்.

இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேகநபர்கள் மூவரும், தாங்கள் குற்றம் செய்யவில்லையெனவும் தங்களை விடுதலை செய்யுமாறும் நீதவானிடம் கோரினர். அத்துடன், தங்களுக்கு நோய்கள் உள்ளதாகவும் மருத்துவ உதவிகள் வேண்டும் எனவும் சந்தேகநபர்கள், நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இவற்றை கருத்திற்கொண்ட நீதவான், மேற்படி சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி வரை கொழும்பு மகசின் சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்குமாறும் ஏனைய சந்தேகநபர்களையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X