Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருட்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி யாழ். நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று (06) தீர்ப்பளித்தார்.
இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவன் என்பதனைக் கருத்தில் எடுத்த நீதிவான், அவரது தண்டனையை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.
குறித்த திருட்டுக்களின் போது அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி கமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து திருடர்களை திருநெல்வேலி பகுதி இளைஞர்கள் அடையாளம் கண்டிருந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலிப் பகுதியில் நடமாடிய 4 பேர், அந்தப் பகுதி இளைஞர்களால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த பையைச் சோதனையிட்ட போது, அதற்குள் பெருமளவு பித்தளைப் பொருட்கள் இருந்தன.
இதன்போது 2 பேர் தப்பி சென்றிருந்தனர். ஏனைய இருவரும் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் மீட்கப்பட்ட பித்தளைப் பொருட்கள் நல்லூர் பகுதியில் திருடப்பட்டவை என அடையாளம் காணப்பட்டன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், இளைஞர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கு இன்று (06) தீர்ப்புக்காக நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
முதலாவது குற்றவாளிக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்த முற்குற்றம் இருந்ததை மன்று கவனத்தில் எடுத்தது.
“குற்றவாளிகள் இருவரும் அத்துமீறி வீடொன்றுக்குள் புகுந்த குற்றத்துக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் செலுத்தவேண்டும்.
அந்த வீட்டுக்குள் பொருள்களைத் திருடிய குற்றத்துக்கு குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஒரு வருடம் சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவன் என்பதை மன்று கவனத்தில் எடுத்து, அவரது சிறைத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிவான் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago