2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘மகாவலி சட்டத்தில் சிறு திருத்தம் போதும்’

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 05 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது” என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும் மறுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று (04) மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,

“திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதுக்கு அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வினை காணவேண்டும். அதாவது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் ஒன்றை கொண்டுவந்தாலே போதுமானது. இங்கு பேசப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என தெரிவித்தார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா, “திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு தேவை. அதனை சிங்களவர்கள் தருவார்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, “நீங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தரமாட்டார்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், “இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர்கள் ஆதரவு தரமாட்டார்கள்.

ஆகவே 50 வீதமான ஆதரவு பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. மேலும் சிங்கள குடியேற்றங்களை வெறுமனே மகாவலி அதிகாரசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் செய்யவில்லை. இந்த குடியேற்றங்களின் பின்னால் அரசாங்கத்தின் பாரிய திட்டமிடல்கள் உள்ளன” என்றார்.

அதனை தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், “முன்னாள் ஆளுநர் பளிகக்காரவுடன் ஒருதடவை பேசியிருந்தபோது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது என அவர் தமக்கு கூறியிருந்ததாக” கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X