2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

’மக்கள் வழங்கிய ஆணையை சிறந்த ஆரம்பமாகவே பார்க்கின்றோம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை ஒரு சிறந்த ஆரம்பமாகவே நாங்கள் பார்க்கின்றோமெனவும் அந்த ஆணையின் அடிப்படையில் நாம் தொடர்ந்தும் கொள்கையுடன் உறுதியாகப் பயணிப்போம் எனவும், யாழ் ஆயரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஆயரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், தேர்தலுக்கு முன்னரும் மதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் தேர்தலுக்குப் பிற்பாடு தேர்தலில் தாங்கள் கணிசமான ஒரு வெற்றியை அடைந்திருக்கின்ற சூழலிலே, மீளவும் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருவதாகவும் கூறினார்.

அத்தோடு, தமது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுப்பதற்கு அவர்களது பங்களிப்பை நாங்கள் கேட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய நல்லை ஆதீனமும் யாழ். ஆயரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியிருக்கின்றார்களெனவும் கூறினார்.

மேலும், “இளந்தலைமையாக இருக்கின்ற எங்களுடைய அணி சுறுசுறுப்பாக செயற்பட வேண்டும். அந்த வகையில் மக்களிடமிருந்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென்ற கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“எங்களைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமான மிகச் சிறந்த ஆரம்பமாகத் தான் பார்க்கிறோம். அந்த வேகத்திலே முன்னுக்குச் செல்வதற்கும் எதிர்பார்க்கிறோம். ஆகவே, எமது மக்களின் ஆணையை மதித்து மக்களின் பிரச்சனைகள் தேவைகளுக்கான தீர்வை நோக்கிய எமது பயணம் இன்னும் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும்” எனவும், அவர் கூறினார்.

அத்துடன், தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையை ஒரு போதும் தாங்கள் மீறி செயற்பட போவதில்லை. கொள்கையை முன்னிறுத்தியே தமது செயற்பாடுகள் அமையுமே தவிர கொள்கை இல்லாதவர்களுடன் ஒருபோதும் நாம் சேர்ந்து பயணிக்கப் போவதில்லை எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X