2025 மே 12, திங்கட்கிழமை

முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் விடுதலை

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்,  என்.ராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்காக, வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து, இன்று (22) விடுதலை செய்யப்பட்டார்.

கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், அவரை விடுவித்து விடுதலை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று தீர்ப்பை வழங்கியது.

இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில், மே மாதம் 13ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், வவுனியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும் என்றும், அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் குமார் ரட்ணம் விண்ணப்பத்தை முன்வைத்தார்.

ஏற்கெனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி, மீள் விசாரணைக்கு இணங்க முடியாதென, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும், மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான தீர்ப்பை வழங்குவதாக, வழக்கு, இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட அமர்வு, இந்தக் கட்டளையை வழங்கியது.

இதன்போது, கண்ணதாசன் குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கட்டளை வழங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X