2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மூடப்பட்ட நிறுவனங்களை மீளத் திறக்க அனுமதி

Princiya Dixci   / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள் இரண்டு உட்பட 8 வியாபார நிறுவனங்களை கட்டுப்பாட்டுடன் இன்று (30) தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் பாலமுரளி தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியதாவது, “இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி, மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

இம்மாதம் 21ஆம் திகதி, கொழும்பு -வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பிசிஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து, யாழ்., திருநெல்வேலியில் அமைந்துள்ள இரு தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகள் மூடப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணம் நகரில் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனம், இரண்டு புடவையகங்கள், புத்தகக் கடை, வெதுப்பகம் உள்ளிட்டவைகளும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டன.

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களுக்கு, காரைநகர் வாசி சென்றபோது கடமையிலிருந்த 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X