2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் மழைக்குப் பின்னர் வைரஸ் தொற்று காய்ச்சல் அதிகரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நிலவிய மழையுடனான வானிலைக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் அதிகரித்துக் காணப்படுவதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு சிரேஷ்ட வைத்திய அதிகாரி எஸ்.யமுணாநந்தா தெரிவித்தார். 

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர்​ தொடர்ந்து கூறியதாவது,

“பெய்து முடிந்த மழைக்குப் பின்னர், யாழில் இரு வகையான காய்ச்சல்களால் 1,000க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர். 

“இன்புளுவன்சா எனப்படும் வைரஸ் காய்ச்சலும் டெங்குக் காய்ச்சலுமே இவ்வாறு தொற்றி வருகின்றது. இன்புளுவன்சா எனப்படும் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் முன், உடல் நோவு, அதிகளவு நோவுடன் தொண்டை அலர்ச்சி, வாந்தி, உணவில் விரும்பமின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். கூடுதலாக இக்காய்ச்சல், சுவாசத்தொற்கு, பொதுவிடங்களில் இடம்பெறும் தொடுகை போன்றன காரணமாக ஏற்படுகின்றன.  

“யாழ். போதனா வைத்தியசாலையில் சாதாரணமாக, 400 தொடக்கம் 500 பேர் வரையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மழைவிட்ட பின்னர் 1,000க்கும் அதிகமானோர் நாளாந்தம் சிகிச்சைக்காக வருகின்றனர். கூடுதலாக இக்காய்ச்சலானது சிறுவர்கள், வயதுவந்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நீர்ப்பீடணம் குறைந்தோரையே தாக்குகின்றது. 

“எனவே,இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்துவதன் மூலமும், பொது இடங்களில் இடம்பெற்ற தொடுகைகளின் பின் சவர்க்காரம் இட்டு கையைக் கழுவுவதன் மூலமும், குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த வைரஸ் காய்ச்சலானது, ஆண்டு தோறும் இரு தடவைகள் ஏற்படுகின்றது. ஏப்ரல், நவம்பர் மாதங்களில் இவை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

“வைரஸ் காயச்சல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரை நாடி, குருதிப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய, தகுந்த மாத்திரைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X