Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித், குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு, இன்று, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகத்ததால், வழக்கு செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் வகையில், அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
2011ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில், இன்று விளக்கத்துக்கு வந்தது.
இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மன்றில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க முற்பட்டார்.
சாட்சி இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக முடியவில்லை. அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பெற்று அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவர் இந்த மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க தவணை ஒன்றை வழங்குமாறு அவரது சட்டத்தரணி மன்றுரைத்தார்.
அதனால் வழக்கு விசாரணையை வரும் செப்டெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
11 minute ago
18 minute ago
22 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
49 minute ago