2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஹோட்டல் அமைக்க அனுமதி கோரியவருக்கு மறியல்

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

அரியாலை - முள்ளி கடற்கரைப் பகுதியில், நட்சத்திர விடுதி அமைக்கத் தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் காணப்பட்ட புராதன சொத்துகளைப் பராமரிக்கத் தவறியதாகக் கூறப்படும் நபர் ​ஒருவரை, வௌ்ளிக்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் ஏ.பீற்றர் போல், நேற்று (23) உத்தரவிட்டார்.

புலம்பெயர் தமிழர் ஒருவர் முள்ளி கடற்கரைப் பகுதியில், உரிய திணைக்களங்களின் அனுமதியுடன் நட்சத்திர விடுதியொன்றை அமைக்க முயற்சித்த போதும், அதற்கான அனுமதியை தொல்பொருள் திணைக்களம் வழங்கவில்லை.

இந்த நிலையில், நட்சத்திர விடுதி அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட இடத்தை, நேரில் சென்று ஆராய்ந்த தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு, அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் காணப்பட்டனவெனவும், அவை இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனவெனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, புராதன சொத்துகளைப் பராமரிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நட்சத்திர விடுதி அமைக்கக் கோரியவருக்கு எதிராக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், தொல்பொருள் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், தனது சட்டத்தரணி ஊடாக, நேற்று முன்தினம் (23) நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவரை, வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X