
தெற்கு ஆசிய பிராந்திய இளைஞர்களுக்கிடையில் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் நோக்கில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற போட்டியில் நான்கு அணிகள் வெற்றிபெற்றன.
பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, இலங்கை ஆகிய நான்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கையை சேர்ந்த சில்ப சயூர நிறுவனம், பங்களாதேஷின் YPSA, நேபாளத்தின் YUWA, மலைத்தீவின் Live & Learn Environmental Education ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இளைஞர்களுக்கான திறன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி 'இளைஞர்களுக்கான தீர்வு' (Youth Solutions) என்ற போட்டியை உலகவங்கி, மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா, சர்வோதய பியூஷன் ஆகியன இணைந்து நடத்தின.
இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக எதிர்நோக்கும் சவால்களையும், தொழிலின்மை, திறன் அபிவிருத்தியின்மை போன்றவற்றை நீக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டதுடன் வெற்றிபெற்ற ஒவ்வொரு அணியினருக்கும் அவர்களது செயற்றிட்டத்துக்கு அமைய 15,000 முதல் 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பணப்பரிசு வழங்கப்பட்டன.
இலங்கை சார்பில் வெற்றிபெற்ற சில்பா சயூர மன்றம் இளைஞர்கள் தற்போது எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி 10 ஆவணப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் 100 இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்களை திரைப்பட இயக்குநர்களாக உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தது.
'இந்த போட்டியை மைக்ரோசொப்டும் உலகவங்கியும் இணைந்து நடத்தியது. பிராந்தியத்திலுள்ள வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க இத்திட்டம் உதவுகின்றது. தெற்கு ஆசியா அதிக இளைஞர்களை கொண்ட பிராந்தியமாகும் அத்துடன் மாதம் ஒரு மில்லியன் பேர் தொழில்;; வாய்ப்புக்களை பெறுகின்றார்கள் ' என உலக வங்கியின் தென் ஆசியாவுக்கான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி கெப்ரியலா அகிலர் தெரிவித்தார்.
'நான்கு நாடுகளிலுள்ள இளைஞர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்ய உலக வங்கியுடன் இணைந்து செயற்பட மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு கிடைத்த சந்தர்ப்பம் பெருமையான விடயமாகும்.
இளைஞர்கள் எதிர்நோக்கும் தொழில்வாய்ப்பின்iமை போன்ற பிரச்சினைகளிலிருந்து அவர்கள் விடுபடு இத்தகைய போட்டிகள் சிறந்த அடித்தளமாகும். இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்களால் தமது நாட்டில் சிறப்பாக பணியாற்ற முடியும்' என மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் சமூக விவகாரங்களுக்கான முகாமையாளர் ஜானகி கருணாரத்ன தெரிவித்தார்.