2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியான உயர்வான பெறுமதிகளை கடந்த வாரமும் பதிவு செய்திருந்தது. பெருமளவான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தமது முதலாம் காலாண்டு அறிக்கைகளையும், ஆண்டிறுதி நிதியறிக்கைகளையும் வெளியிட்டிருந்ததை அவற்றின் பெறுபேறுகள் சந்தையின் உயர்வான போக்கில் செல்வாக்கு செலுத்தியிருந்ததாக சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,248.44 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3435.81 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 28ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,542,810,036 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 32,957 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 31,544 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,413 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
வாரத்தின் முதல் நாள் கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இடம்பெற்றிருந்தது. சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. எஸ்எம்பி லீசிங், ஏசியா அசெட் ஃபினான்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டிருந்தது. புரள்வு பெறுமதியில் வெளிநாட்டு கொள்வனவு 30 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.

செவ்வாய்க்கிழமை
பங்குச்சந்தை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய முன்னணி பங்குகளின் விலை உயர்வால் உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. வங்கித்துறையை சேர்ந்த யூனியன் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது வெளிநாட்டவர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். இதேவேளை, ஓவர்சீஸ் ரியல்டி மற்றும் பீபிள்ஸ் மேர்ச்சன்ட் அன்ட் ஃபினான்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். 

புதன்கிழமை
சந்தையில் நேர் பெறுமதிகள் தொடர்ந்தும் பதிவாகியிருந்தன. புரள்வு பெறுமதி 1.2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. எக்ஸ்போலங்கா, வலிபல் வன் மற்றும் நேஷன் லங்கா ஃபினான்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மீது நிறுவனசார் ஆர்வம் காணப்பட்டது. யூனியன் வங்கி பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டு செயற்பாடுகள் குறைந்தளவில் காணப்பட்டது.

வெள்ளிக்கிழமை
பங்குச்சந்தை தொடர்ந்தும் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்து நிறைவடைந்திருந்தது. வட்டவளை பிளான்டேஷன்ஸ், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மற்றும் ரோயல் செரமிக்ஸ் ஆகிய பங்குகள் சந்திப்புகளை பதிவு செய்திருந்தது. லங்கா ஐஓசி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். இதேவேளை வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். இவர்கள் அதிகளவு எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது கவனம் செலுத்தியிருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பீசி ஹவுஸ், லங்கா சென்ச்சரி (உரிமை), கீல்ஸ் பூட், சிலோன் லெதர் (உரிமை) மற்றும் ஒஃபிஸ் எக்யுப்மன்ட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஜி.எஸ்.ஃபினான்ஸ், பிசி பார்மா, மொரிசன்ஸ், எஸ் எம் பி லீசிங் (உரிமை) மற்றும் சுவதேஷி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.05 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 223.50    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X