2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் சம்பத் வங்கி

A.P.Mathan   / 2014 மே 28 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்ளை தயார்ப்படுத்துவம் வகையில் வருடாவருடம் சம்பத் வங்கி ஏற்பாடு செய்யும் 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்கை இந்த ஆண்டும் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருத்தி, நெத் குஅ வானொலி சேவையுடன் இணைந்து இந்த புலமைப்பரிசில் கருத்தரங்குகளை சம்பத் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் நோக்கம், மாணவர்களும் பெற்றோர்களும் சவால்களையும், சிக்கல்களையும் ஆரோக்கியமான முறையிலும், முழுமையான முறையிலும் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலான வழிகாட்டல்களை வழங்கி, தமது எதிர்காலத்துக்குரிய சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொள்ள வழிவகுப்பதற்காகவே ஆகும்.

இந்த கருத்தரங்குகள், மாணவர்களை தமது வாழ்வில் தேசிய மட்டத்தில் இடம்பெறும் பரீட்சைக்கு எவ்வாறான முறையில் தயார்ப்படுத்துவது என்பது பற்றி விளக்கமளிக்கும் அதேவேளை, பரீட்சைக்கு பின்னர் பெறுபேறுகள் வெளியாகும் போது எழக்கூடிய அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விளக்குவதாக அமையும். சகல கருத்தரங்குகளும் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள சிறுவர்கள் இதில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் கருத்தரங்குகள், பின்தங்கிய, வளங்கள் குறைந்த பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சம்பத் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி பிரிவின் உதவி பொது முகாமையாளர் தாரக ரன்வல கருத்து வெளியிடுகையில், 'சம்பத் வங்கியைச் சேர்ந்த நாம், நாட்டின் எதிர்காலத்திற்காக 100% எம்மை அர்ப்பணித்துள்ளோம். இதற்கமைவாக 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்கு தொடரையும் நாம் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ளோம். சம்பத் சிறுவர் சேமிப்பு கணக்குகளை வைத்திருப்போருக்கு மட்டும் இந்த கருத்தரங்குகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையின் சகல சிறுவர்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டே இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2014 மே மாதம் 24ம் திகதி முதலாவது கருத்தரங்கு கம்புறுபிட்டிய பகுதியில் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதான மாகாணங்களிலும் கருத்தரங்குகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.

ஓவ்வொரு கலந்துரையாடலின் போதும், திறமை வாய்ந்த ஆசிரியர்களின் மூலம், இரண்டு மாதிரி வினா பத்திரங்கள் குறித்த விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்படும். வெவ்வேறு விதமான வினாக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது, வினைத்திறன் வாய்ந்த பதில்களை எவ்வாறு வழங்குவது,    நேர முகாமைத்துவம் மற்றும் வினா அளிப்பதற்கான இலகு வழிமுறைகள் ஆகியன பற்றியும் விளக்கங்கள் வழங்கப்படும். இம் மாதிரி வினாப்பத்திரங்கள் 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்கு ஆசிரியர் குழுவினரால் பல மாதங்களுக்கு முன்னதாகவே தயார்படுத்தப்பட்டவை.

'கடந்த ஆறு ஆண்டுகளில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகளில், நாம் எமது 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' மாதிரி வினாப்பத்திரங்களில் தயாரித்திருந்த வினாக்களை போன்ற வினாக்கள் உள்ளடங்கியிருந்தன என்பதை நாம் மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முழுக் குழுவினரும் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கு கிடைத்த சிறந்த கௌரவமாக இது அமைந்துள்ளது' என புகழ்பெற்ற வினாத்தாள் தயாரிப்பாளரும் முன்னணி பாடசாலையொன்றின் புகழ்பெற்ற ஆசிரியருமான சரத் ஆனந்த தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'எமது கருத்தரங்குகளின் போது, சிறுவர்களுக்கு ஏற்ற முறையிலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், நாம் நுட்பங்களை கையாண்டு வருகிறோம். அத்துடன், மாணவர்கள் மத்தியில் பரீட்சை பீதியை இல்லாமல் செய்யும் வகையிலான மற்றும் பரீட்சை தொடர்பில் ஏற்படும் அழுத்தத்தை கையாளும் வகையிலான செயற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன' என்றார்.

சிறுவர்களின் கருத்தரங்குகளோடு, ஒவ்வொரு கருத்தரங்குகளின் போதும், பெற்றோர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிப்பட்டறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் தமது பிள்ளைகளை பரீட்சைக்கு எவ்வாறு தயார்ப்படுத்துவது, அவர்களுக்கு எந்த வகையில் ஊக்கமளிப்புகளையும், உதவிகளையும் வழங்குவது பற்றி விளக்கங்களும் வழங்கப்படும். அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும், அவர்களை எவ்வாறான முறையில் கையாள வேண்டும் என்பது பற்றியும் இதன் போது விளக்கங்கள் வழங்கப்படும். மேலும், இந்த நிகழ்வில் பங்குபற்றும் பெற்றோருக்கு, வீட்டு நிதி நிலைகளை எவ்வாறு கையாள்வது தொடர்பான விளக்கங்களை சம்பத் வங்கி வழங்கி, அதன் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை எவ்வாறு சிக்கனமாக நிர்வகிப்பது பற்றிய அறிவையும் வழங்குகின்றது.

நெத் குஅ வானொலி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' திட்டத்தை முன்னெடுக்க சம்பத் வங்கியுடன் கைகோர்த்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டை நாம் சம்பத் வங்கியுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளோம். மாணவர்கள் மத்தியில் ஆக்கத்திறன், சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் 'கலபலபஞ்சா' எனும் முதல் தர சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கும் முன்னணி வானொலிச் சேவை நிறுவனம் எனும் வகையில், நாடு முழுவதும் இக் கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாம் பெருமை அடைகின்றோம். குறிப்பாக வகுப்புகள், ஆசிரியர்கள் போன்ற வளங்களை கொண்டிராத சிறுவர்களுக்கு உதவும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், சிறுவர்களின் கல்வி எதிர்காலம் தொடர்பான முக்கிய விடயங்களும் இக் கருத்தரங்குகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகின்றன.' என்றார்.

'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்கு தொடரானது, அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டிலிருந்து மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகளவு கேள்வி மற்றும் பங்குபற்றுநர்களின் எண்ணிக்கையின் காரணமாக, பல நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் 2013இல், இந்த திட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முற்று முழுதாக தமிழ் மொழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்று வவுனியா நகரில் இடம்பெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X