Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2025 மே 19 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என 2024 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 120 ரூபாயாக காணப்பட்ட உப்பு கிலோகிராம் ஒன்றின் விலை 180 முதல் 200 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், தற்போது, இம்மாதத்தின் முற்பகுதியிலிருந்து இந்த உப்பின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 400 முதல் 500 ரூபாயாக உயர்ந்துள்ளதையும், பெருமளவான விற்பனை நிலையங்களில் அல்லது கடைகளில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் பல பிரதேசங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
நாலாபுறமும் கடலால் சூழ்ந்த இயற்கை வளம்மிக்க இலங்கை நாட்டில், இயற்கையாக கிடைக்கக்கூடிய கடல்நீரையும், சூரிய ஒளியின் வெப்பத்தையும் கொண்டு உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. நாட்டின் புகழ்பெற்ற உப்பளமாக ஆனையிரவு உப்பளம் பற்றி பெரிதும் பேசப்பட்டாலும், யுத்தம் காரணமாக அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, இந்த அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதன் செயற்பாடுகள் ஒரு சில சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
ஆனையிரவுக்கு மேலதிகமாக, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகள் உப்பு உற்பத்திக்கு அவசியமான உரிய காலநிலையை கொண்டுள்ளன. உப்பு உற்பத்திக்கு கடல் நீர் மட்டும் இருந்தால் போதாது. தொடர்ச்சியாக 45 முதல் 50 நாட்களுக்கு இடைவிடாது நன்கு சூரிய வெளிச்சம் காணப்பட வேண்டும். ஆனாலும், கடந்த ஆண்டில் நாட்டின் வரண்ட பகுதிகளான புத்தளம், ஹம்பாந்தோட்டை போன்றன உள்ளடங்கலாக பெருமளவான பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமை இந்த உப்பு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு வரலாம் என உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்வுகூரியிருந்தனர்.
சிஸ்டம் சேன்ஜ் எனக்கூறிக்கொண்டு பல செயற்பாடுகளை முன்னெடுக்கும் இந்த அனுர அரசாங்கமும், இந்த உப்புப் பிரச்சனையை முன்னைய அரசாங்கங்களைப் போலவே கையாள்வதை அவதானிக்க முடிகிறது. உப்புப் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசு தலையிட்டு 30000 மெட்ரிக் டொன் உப்பை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தகமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செயற்பாடுகளுக்கு தனியார் துறைக்கும் அனுமதியளிக்கப்படும்பட்சத்தில், இந்தப் பிரச்சனைக்கு துரிதமாக தீர்வு காணக்கூடியதாக இருக்கும். ஏனெனில், இந்த ஆண்டிலும் நாட்டின் உப்பளங்களுக்கு தொடர்ச்சியாக 45 – 50 நாட்களுக்கு சூரிய வெளிச்சம் கிடைக்குமா என்ற கேள்வி நிலவுகிறது. வழமையாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை இம்முறை மாற்றமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. பெருமளவான பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை தொடர்வதற்கு அதிகளவு சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில், இந்த உப்புப் பிரச்சனைக்கு தீர்வு காண அனுர அரசாங்கம் சிஸ்டம் சேன்ஜ் செய்யும் விதத்தில் யோசிக்காமல் செயற்படுவது வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது.
நாட்டின் ஆண்டுக்கான சராசரி உப்புத் தேவை ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மெட்ரிக் டொன்னாக அமைந்துள்ளது. அதில் இல்லங்கள் அடங்கலாக, உணவு நுகர்வுக்கு சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மெட்ரிக் டொன் உப்பு தேவைப்படுகின்றது. எஞ்சிய தொகை இதர தொழிற்துறைசார் உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உப்பு நுகர்வை எடுத்துக் கொண்டால், இலங்கையின் சராசரி தனிநபர் ஒருவர் ஒருநாளில் சுமார் 10 கிராம் உப்பை உணவினூடாக உள்ளெடுப்பதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின் பிரகாரம் ஒரு நாளில் நபர் ஒருவர் உள்ளெடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அளவுக்கதிகமாக உப்பு நுகர்வுக்கு இலங்கையர்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தாம் உள்ளெடுக்கும் அல்லது நுகரும் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிட முடியும். அதிகளவு உப்பு உள்ளெடுப்பதனூடாக குருதி அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் கள நிலைவரத்தை எடுத்துப்பார்த்தால், உப்புக்கு உக்கிரமான தட்டுப்பாடு நிலவுவதை காண முடிகிறது. சுப்பர் மார்க்கெட்களில் ஒரு நபருக்கு இரண்டு பைக்கற்களுக்கு அதிகமாக உப்பு கொள்வனவு செய்ய முடியாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் உணவு தயாரிப்பதற்கு காணப்படும் சிக்கல்களை விட, இலங்கையின் பிரதான வெளிநாட்டு வருமானமீட்டும் சுற்றுலாத்துறையும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள், சுற்றுலா தங்குமிடப் பகுதிகள், ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு உப்பு தேவை அதிகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தட்டுப்பாட்டினால் அவையும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஒரு பிரச்சனை எழவுள்ளது என்பது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் எச்சரிக்கைவிடுத்தும், அது தொடர்பில் அக்கறை கொள்ளாமல், எவ்விதமான முன்கூட்டிய திட்டமிடல்களுமின்றி, தட்டுப்பாடு ஏற்படும் வரை காத்திருந்து, அந்தப் பிரச்சனையையும் தன் தலையில் போட்டுக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளும், முன்னைய அரசாங்கங்களைப் போலவே காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் அதிகளவு சூரிய ஒளி கிடைக்கும் சூழல் காணப்படுகிறது. உப்பு உற்பத்திக்கு உகந்த காலநிலை அங்குநிலவும் நிலையில், உப்பளங்களை நிறுவும் முயற்சிகளுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்கலாம். இலங்கையின் உப்பு உற்பத்தியின் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை அரசாங்கம் தன் வசம் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, உப்பில்லாப் பண்டம் குப்பையில் எனும் பழமொழிக்கமைய வாழப்பழகிய நாம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கமைய, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கமைய அளவுக்கதிகமான உப்பு நுகர்வதை தவிர்த்து, ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அனுர அரசாங்கம் உப்பு வழங்க வேண்டும், அனுர உப்பிடுவாரா என எண்ணிக் கொண்டிருப்பது, விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
31 May 2025