2025 ஜூலை 05, சனிக்கிழமை

'இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் இராஜினாமா செய்யுங்கள்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிராமப்புறங்களில் தனியார் காணிகளை சுவீகரிப்பது மட்டுமன்றி, அரச காணிகளிலும் முகாம்கள் அமைப்பதற்காக, குறிப்பாக இராணுவத்துக்கும் கடற்படையினருக்கும் கையளிக்கும் அரசின் கொள்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக எதிர்க்கின்றது' என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.        

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,      
                                                
'முள்ளிவாய்க்காலில் தனியாருக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரசு சுவீகரிப்பது மக்களின் ஆவேசத்தை தூண்டும் செயலாகும். நான் ஒருபோதும் எதனையும் இனத்துவேசத்துடன் அணுகுபவன் அல்ல. ஆனால், அரசாங்கம் உள்நோக்கம் எதுவுமின்றி  நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கும்; செயல்களை வரவேற்று இருக்கின்றேன்.

இவ்வாறான செயல்களால் வடக்கு, கிழக்கில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவசியத் தேவைகளை புறந்தள்ளிவிட்டு, இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அவசரம் என்ன? வடக்கே ஏதாவது இராணுவ முகாம்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? அப்படியானால் முழு நாடும் அதனை அறியட்டும்.

அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்க பெரும் பொறுப்புடன் முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, அரசாங்கம் சங்கடமான நிலைமையை உருவாக்குவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

வடக்கு, கிழக்கில் மேலும்; இராணுவ முகாம்களை அமைக்கும் அரசின் செயற்பாட்டை தடுக்க முடியாது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கோருகிறேன்' என அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .