2025 ஜூலை 30, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கட்டுப்படுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதுடன், இவர்களின் அத்துமீறிய  செயற்பாட்டை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராம மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடமே இவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மன்னார், புதுக்குடியிருப்பு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கடற்றொழில் சேவை நிலையம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் மன்னார் மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராம மீனவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சரிடம் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களை விட தற்போது இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்த நிலையில் உள்ளது. மேலும், அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த விடுதலையைச் சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்ச்சியாக வந்து செல்லுகின்றனர்.

இதனால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உறுதியான முடிவை  எடுக்குமாறு அமைச்சரிடம் மன்னார் மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜித சேனாரத்தின, 

இனிவரும் காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், இவர்கள் பயணிக்கும் படகுகளை கடற்கரைக்கு கொண்டுவந்து கட்டிவைக்க வேண்டும் எனவும் கடற்படையினருக்கு பணித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .