
பளையில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வரலக்ஷ்மி பூஜை வழிபாடுகள் இரட்டைக்கேணி அம்மன் கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அவசரமாக வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் எடுத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையின் பின்னர் மீண்டும் பளை நோக்கி வந்துகொண்டிருக்கையில், தலைக்கவசம் அணிந்திராத பயத்தினால் பொலிஸாரை கண்டவுடன் வேறு ஒரு பாதைக்கு திருப்ப முனைந்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களின் பின்னால் வந்துகொண்டிருந்த பஸ் வண்டி மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பளை பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி. ராஜபக்ஷ - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
குறித்த விபத்தினால் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மூன்றாவது நபர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.
விபத்தில் பலியானவர் 54 வயதுடைய வயிரன் தியாகராசா என்பவர் எனவும் இவர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் எனவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(படங்கள்: சி.சிவகருணாகரன்)
