2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச விசாரணையை கோரி போராட்டம்

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மன்னார் ஆகாஸ் விடுதியில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மன்னார் பிரஜைகள் குழுவின தலைவர் அருட்தந்தை இம்மனுவேல் செபமாலை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோஷை, மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராச் லெம்போட் உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத  மண் அகழ்வு ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சகல பிரச்சினைகள் தொடர்பிலும் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .