2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நீரை விரயமாக்காத தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: ஐங்கரநேசன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைவதுடன், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைவதாலும் சொட்டு நீரையும் சொத்தாக கருதிச் சேமிக்க வேண்டியவர்களாக தாம்  வாழ்வதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்  தெரிவித்தார்.

இந்நிலையில்,  நீரை அதிகம் பயன்படுத்தும் துறையாக விவசாயம் இருப்பதால் நீரை விரயமாக்காத நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டுமெனவும் அவர் கூறினார்.
.
உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரணையுடன் மானிய அடிப்படையில்  கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு  கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வியாழக்கிழமை (13) நீரிறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாம் பயன்படுத்தும் தண்ணீரில் முக்கால் பங்குக்கும் கூடிய  தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுகி;றது.  மனிதர்கள் பயிர் செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்து பயன்படுத்திய வெள்ள நீர்ப்பாசன முறையை  இப்போதும் பயன்படுத்துகிறோம்.

பயிர்களைச் சுற்றித் தண்ணீரை வெள்ளக்காடாகத் தேக்கி வைப்பதில் ஏற்படும் திருப்தி பரம்பரையாக எங்களிடம் நீடிக்கிறது. கிணறுகளிலிருந்து நீர்ப்பம்பிகள் இரவு, பகலாகத் தண்ணீரை இறைக்கின்றன. ஆனால், இந்தத் தண்ணீரில் பெரும் பங்கை வீணாக்குகிறோம்.  தண்ணீரில் பெரும்பங்கு தேவையில்லாது நிலத்துக்குப் போக, இன்னுமொரு பெரும்பங்கு ஆவியாகவும் இன்னுமொரு பங்கைக் களைகள் குடிக்க பயிர்களைச் சென்று சேர்வது பாய்ச்சிய தண்ணீரில் அரைவாசிக்கும் குறைவானளவு தான்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், தண்ணீரை இயன்றளவு சேமிப்பது எல்லோரினதும் கடமை. தொலைபேசிகள், கணினிகள் போன்ற சாதனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமானவுடன் பழையவை நன்றாக இருந்தாலும் கூட  வீசிவிட்டு உடனடியாகப் புதியவற்றை வாங்கும் நாம் விவசாயத்தில் மட்டும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.

இஸ்ரேல் அறிமுகப்படுத்திய சொட்டு நீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம் போன்ற  புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பயிர்களுக்குத் தேவையானளவு தண்ணீரை மட்டுமே விநியோகிக்கலாம். இந்த நவீன நீர்ப்பாசனக் கருவிகளை உணவு விவசாய நிறுவனத்தின் உதவியுடன் விவசாயத் திணைக்களம் எங்கள் விவசாயிகளுக்கு விநியோகித்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. அவர்கள் பாரம்பரிய முறையில் தண்ணீரை இறைத்துக்கொண்டிருக்கவே விரும்புகின்றார்கள். இந்த மனப்பாங்கில் மாற்றம் வரவேண்டும்.

1965இல் யாழ். வந்திருந்த இஸ்ரேலிய விஞ்ஞானி ஏரட் எமது இடைவிடாத இறைப்பு முறைகளை பார்வையிட்ட பின்னர், குடாநாடு பாலைவனமாகும் என்று எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையைக் கருத்தில் எடுத்து ஊதாரித்தனமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், பயிர்களுக்கு வேண்டிய நீரை மட்டுமே தரக்கூடிய சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூறல் நீர்ப்பாசனத்தையும் அதிகளவில் நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். அப்போதுதான் நீர்வளத்தைப் பேணி விவசாயத்தையும் மேம்படுத்த முடியும்'  என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான அ.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .