2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பண மோசடி: சந்தேக நபர் குடும்பத்துடன் தலைமறைவு

Gavitha   / 2014 ஜூலை 26 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் வசித்து வரும் பிரபல வர்த்தகர் ஒருவர் பணமோசடியில் ஈடுபட்டு, குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை (25) தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பண மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களினாலேயே இம்முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சந்தேக நபர் மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றை (சலூன்) நடத்தி வந்துள்ளார். இதன் பின்னர் வன்பொருள் (ஹாட்வெயார்) உட்பட பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்ததோடு சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அதிகளவான வர்த்தகர்கள், அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இவரிடம் சீட்டுக்காக பணம் செலுத்தி வந்துள்ளனர். சில ஆண்டுகளாக சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகள் சரியாக இடம்பெற்று வந்துள்ளன.

எனினும் கடந்த சில தினங்களாக இவரது வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும் அவருடைய நடமாட்டம் இல்லாமையும் இதனோடு தொடர்புடைய அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

இதனை அவதானித்தவர்கள் சந்தேக நபர் தொடர்பில் அயலவர்களிடம் விசாரித்த போது, சந்தேக நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் கம்பனி அதிகாரிகள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் சந்தேக நபருடைய வீடு மற்றும் வியாபார நிலையங்களுக்கு சென்று நிலைமை தொடர்பில் விசாரித்து தெரிந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்தே பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்து வருகின்றனர். சந்தேக நபர் பல கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியிருக்க கூடும் என பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது முறைப்பாடுகளில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X