2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன : து.ரவிகரன்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

இம்மண்ணின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அந்நிய குடியேற்றங்களுக்கு தாராளமாக உரிமைகள் வழங்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று  (10) தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இன்று இங்கு இடம்பெறுகின்ற மூத்த பிரஜைகள் இல்லத்திறப்பு விழாவை முக்கிய நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

யுத்த காலத்தின் போது இதே மண்ணில் தான்,  பாதுகாக்கப்பட்ட வலயம் என்று அறிவித்து விட்டு மக்களை இங்கே ஒன்று கூட வைத்து, மக்கள் நெருக்கமாக கூடியிருந்த நிலையை பயன்படுத்தி குண்டுகள் வீசி எம் மக்கள் மீதான அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏராளமான எங்கள் உறவுகள் இங்கே தான் கொல்லப்பட்டனர் என்பதை முதலமைச்சர்  உள்ளிட்ட அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.   இதே மண்ணில் நாம் எம் உறவுகளுக்கான மீள் கட்டமைப்பு நிகழ்வொன்றில் எழுந்து நிற்கிறோம்.

இங்கு ஒரு மாபெரும் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு விட்டதோடு மட்டுமல்லாது, தற்போதும் எம் மக்கள் மீதான அநீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து வருகிறது. இங்கே வாழ்கின்ற  பூர்வீக குடிகளான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிற உரிமைகள் அனைத்தும்  அந்நியக் குடியேற்றங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன.

ஏனைய இன மக்களுக்காக காணிகள் அபகரிக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதில்லை. ஆனால், முறைப்படி இம்மண்ணில் உரிமையுள்ள தமிழ் மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது.

இது தவிர இராணுவத்தினரால் நிலங்களால் அபகரிக்கப்படுவதால், மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

முள்ளிவாய்க்காலில் அபகரிக்கப்பட்ட 617 ஏக்கரில் தனியார் நிலங்களும் உள்ளடக்கம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மணலாறு, கொக்குத்தொடுவாய், புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், மக்கள் காணி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

இவ்வாறு எம் மக்கள் மீது இன அழிப்பை நடாத்தி,  தொடர்ந்தும் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள்.  எம் மக்கள் மீது இவ்வாறு திணிக்கப்படுகின்ற அநீதிகள் அனைத்தையும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோதராலிங்கம், கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன், சிவமோகன், கனக சுந்தர சுவாமி, மேரிகமலா குணசீலன் மற்றும் சித்தார்த்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X