.JPG)
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
அஞ்சல் ஓட்டப்போட்டியில் தேசிய மட்ட ரீதியில் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்று மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (9) வியாழக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
21 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டி கடந்த 4ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட மன்னார் வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலை வீரர்கள் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் குறித்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 வீரர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌவிக்கும் நிகழ்வு வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நேற்று காலை 9 மணியளவில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் முன் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட எஸ்.அமலதாஸ், என்.இருதயராஜன் வாஸ், எம்.அனஸ்ரியஸ் வாஸ், எஸ்.பிரதீப் பெர்னாண்டோ, எம்.கிங்சிலி லெம்பேட் ஆகிய 5 வீரர்களும் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களான ஏ.ஒகஸ்ரின், பி.பற்றசன், பி.தேவா லெம்பேட், எப்.டிலானி லெம்பேட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் அப்பாடசாலையின் அதிபர் எஸ்.சந்தியாகு (எப்.எஸ்.சி), மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், மாவட்ட உதவி செயலாளர் வி.பவாகரன், நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாசன், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் உற்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கெரவித்தனர். அதனைத் தொடர்ந்து வீரர்களும் ஆசிரியர்களும் பவனியாக வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
