2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 15 சதவீதம் மாற்றுத்திறனாளிகள்: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கடந்தகால யுத்தம் எங்கள் சமூகத்தில் நிரந்தர வடுவாக  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை விட்டுச்சென்றுள்ளது. இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட அடிப்படையில் தொடர்ச்சியான உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவது மிகவும் அவசியமானதொன்று என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் மாற்றுவலுவுள்ளோர் கிராமிய அமைப்பினருடனான சந்திப்பொன்று சனிக்கிழமை (06) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '400 குடும்பங்கள் வாழ்கின்ற ஊற்றுப்புலம் கிராமத்தில் 67பேர் மாற்றுவலுவுள்ளோராக இருப்பது வேதனையான விடயம். இந்த மாற்றுவலுவுள்ளோரில் பெரும்பாலனவர்கள் இளம் சமூகமாக  இருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயம்' என்றார்.

'கிளிநொச்சி மாவட்டத்தின் சனத்தொகையின் விகிதாசாரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின்  எண்ணிக்கை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில் காணப்படுகிறது. எங்கள் சமூகத்தில்  இவர்கள் விசேடமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள்.  இவர்களுக்கு நிரந்தர வாழ்வாதார தீர்வு அவசியம்.

இவர்களின் எதிர்காலத்துக்காக பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இங்கு சிலர் 1,000 அல்லது 2,000 ரூபாய் பெறுமதிகளில் உணவுப் பொதிகளை வழங்கிவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்து விட்டதாக கூறி வருகின்றனர். இது உண்மையிலேயே இந்த குடும்பங்களை ஏமாற்றும் செயற்பாடுகள் ஆகும்.

இனியும் அவ்வாறான நிலைமைக்கு எமது மக்கள் சென்றுவிட முடியாது. நாங்கள் இனி எங்களின் எதிர்காலத்தை எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு நல்லதொரு எதிர்கால வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எனவே அதற்கான நல்ல சூழலை ஏற்படுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X