2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அந்தப் பாடசாலையின் அதிபரை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரியும், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோரும் இன்றைய தினம் புதன்கிழமை (02) காலை பாடசாலைக்கு முன்னர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் - பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கே.பிகிராடோ அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி பள்ளிமுனை கிராமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும் அதிபரின் இடமாற்றத்துக்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தநிலையில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை கண்டித்தும், குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்றைய தினம்  காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி பாடசாலைக்கு சமூகமளித்து பெற்றோருடன் கலந்துரையாடினார். இதன்போது மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஷாந்தன் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியார் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த பாடசாலை வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி பாடசாலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இந்தப் பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எனவே அதிபரைத் தொடர்ந்தும் இப்பாடசாலையில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே அதிபரின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிபரின் இடமாற்றத்தை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி உறுதியளித்தார்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத் கைவிடப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற நிலையில் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .