2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

Niroshini   / 2021 ஜூன் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 

வவுனியா - ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து, ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்குச் செல்பவர்களை, அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை ஏற்றிச்செல்ல வந்த பஸ்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈஸ்வரிபுரம் கிராமத்திலும், சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (21) காலை, ஊழியர்களை பணிக்கு ஏற்றி வருவதற்காக, ஆடைத்தொழிற்சாலைகளில் இருந்து ஈஸ்வரிபுரம் கிராமத்துக்கு பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்போது, அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள், ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்குச் செல்பவர்களாலேயே, இப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவலடைவதாகத் தெரிவித்து, தமது கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்குச் செல்பவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஊழியர்களை ஏற்றி செல்வதற்கு வருகைதந்த பஸ்கள், மீள ஆடைத்தொழிற்சாலைக்கு திரும்பிச் சென்றன.

இதையடுத்து, ஆடைத்தொழிற்சாலையில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் சிலர், கிராம மக்களுடன் கலந்துரையடலில் ஈடுபட்டனர்.

எனினும், மக்கள் உடன்பாட்டுக்கு வராத நிலையில், ஈச்சங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், வேலைக்கு செல்வதனை எவரும் மறிக்க முடியாதெனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்களை ஆடைத்தொழிற்சாலைக்கு வருகை தந்து மேலதிகாரிகளுடன் கதைக்குமாறு கோரிய ஆடைத்தொழிற்சாலை அதிகாரிகள், நாளை (22) முதல் அனைவரையும் பணிக்கு வருமாறும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X