2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்தை மீட்க நாளை போராட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை மீட்டெடுக்கும் முகமாக, வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், போராட்டமொன்று நாளை மறுதினம் (21) முன்னெடுக்கப்படவுள்ளதென, ஆலய நிர்வாக சபையின் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அறிக்கையொன்றை இன்று (19) வெளியிட்ட அவர், தொல்லியன் திணைக்களத்தின் செயற்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.

"5 தலைமுறைகள் கடந்தும், பல்லாண்டு காலமாக வழிபாடு செய்துவரும் இவ்வாலயத்தை, தொல்​லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள, இலங்கை தொல்லியல் திணைக்களம் இன்று முனைப்புக்காட்டி வருகிறது" என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் மரபு சார்ந்த பல இடங்களையும், தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதாகத் தெரிவித்து, பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய அவர், கன்னியா வெந்நீரூற்றும் கதிர்காமமும், அதற்கான உதாரணங்களெனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலை, வெடுக்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அதை வலியுறுத்தும் முகமாக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, நாளை மறுதினம் (21) காலை 9 மணிக்கு நடைபெறும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய மீட்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கோரியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலை, தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டதென, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாலயம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .