2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் மீது இராணுவ அதிகாரி தாக்குதல் முயற்சி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 14 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என். நிபோஜன் 

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது செவ்வாய்க்கிழமை (12) இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்படக் கருவியையும் சேதமாக்கியுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பரந்தன் - பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்துக்கு அருகில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.45க்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் கேள்வியுற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீதே சிவில் உடையில் நின்ற இராணுவ கேணல் எனத் தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, ஊடகவியலாளரின் கையில் இருந்த புகைப்படக் கருவியையும் பறித்தெடுத்து அதில் இருந்த புகைப்படங்களையும் அழித்துள்ளதோடு, கமெராவின் கைப்பட்டியைப் பிடித்து வீதியில் அடிக்கவும் முற்பட்டுள்ளார். 

இதன் போது கமெராவின் லென்ஸ் பகுதி சேதமாகியுள்ளது. 

அன்றைய தினம், இராணுவ நீர்த்தாங்கி வாகனமும் தனியார் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது. 

இதனைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர், விபத்துச் சம்பவத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதன்போதே இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த சம்வம் தொடர்பில் ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். 

கிளிநொச்சியில் குறுகிய காலத்துக்குள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். 

குறித்த விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்த நிலையில் 23 வயதுடைய இராணுவ சிப்பாய் பலியானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X