2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போன தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

மேலும், தமது சங்கத்துடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சகல குடும்பங்களையும் மாவட்டந்தோறும் சமநேரத்தில் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்குமாறும் இதில் அனைவரையும்  இணைந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் ஆட்கடத்தல் சம்பவங்களினால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான சாட்சிகளும் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனக்கு அருகே அமர வைத்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க், 'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம்' என்று அசாதாரணமாக கூறியுள்ளார்.

அப்படியென்றால், 'எமது பிள்ளைகள் இதுவரை காலமும் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? அவர்களை தடுத்து வைத்திருந்தவர்கள் யார்? அவர்களை சுட்டுக்கொன்றவர்கள் யார்? கொன்றவர்களுக்கு என்ன தண்டனை? பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு என்ன நீதி நியாயம்? என்றெல்லாம் எவ்விதமான எதிர்க்கேள்விகளையும் பிரதமரிடம் கேட்காமல், 'நக்குண்டார் நாவிழந்தார்' எனும் நிலையாக கூட்டமைப்பினர் உள்ளனர். இதிலிருந்து எமது சமகால பிரச்சினைகளுக்கெல்லாம் யார் மூலகாரணம்? என்பதை எம்மால் மிகத்தெளிவாக கண்டறிய முடிகின்றது என்றார்.

'இந்தப்போராட்டம் நடத்தப்படும் காலம், நேரம் இடம் தொடர்பான விவரங்கள், ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமுக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் விரைவில் அறியத்தரப்படும்'என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X