2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காணி உரிமையாளர்களை கண்டறிவதில் சிரமம்

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய உரத்துக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் காணி உறுதிப்படுத்தலில், உண்மையான காணி உரிமையாளர்களை கண்டறிவதில் அதிகாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் நெற் பயிருக்கான உரம் கமநலசேவை நிலையங்கடாக மானிய உரமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய அரசு மானிய உரத்துக்கு பதிலாக விவசாயிகளுக்கு வங்கிகள் ஊடாக பணமாக வழங்குகின்றது.

இந்தப் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளை உறுதிப்படுத்துவதில் கிராம அலுவலர்களின் கையொப்பம் அவசியமாகின்றது. 

இந்நிலையில், கிளிநொச்சி புதுமுறிப்பில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தில் புதுமுறிப்புக் கிராம அலுவலரினால் கிராம அலுவலர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

அதாவது புதுமுறிப்புக் குளத்தின் கீழ், நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களிடம் காணிகளை உறுதிப்படுத்தப்படக் கூடிய ஆவணங்கள் இல்லை. 

தற்போது விவசாய முயற்சிக்காக பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளின் படிவங்களில் கிராம அலுவலர் என்ற வகையில் தாங்கள் கையொப்பமிடும்போது, அக் கையொப்பத்தை பயன்படுத்தி காணி தொடர்பான ஆவணங்களாக எதிர்காலத்தில் காணி உரிமையற்றவர்களும் பயன்படுத்தக்கூடிய நிலையுள்ளது. 

இதனால், பிழையான வழிகளில் பணத்துக்காக இடப்படும் கையொப்பம் எதிர்காலத்தில் காணிக்கான ஆவணமாக பயன்படுத்தி நீதிமன்றம் வரை செல்லக்கூடிய நிலையிருப்பதன் காரணமாக, உறுதிப்படுத்துவதில் நெருக்கடி நிலையுள்ளது என்றனர். இந்த விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்துக்கும் தெரியப்படுத்தினர்.

இருக்கின்ற ஆவணங்களையும் பெயர்ப்பட்டியலையும் சேகரியுங்கள். அதன் உண்மைத்தன்மை தொடர்பாக ஆராய்வு செய்வோம் என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்வுகள் காரணமாக மீள்குடியேற்றத்தின் பின்னர் காணிகளை உறுதிப்படுத்துவதில் பிரதேச செயலக, மாவட்டச் செயலக மட்டங்களில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. காணி உரிமையாளர்கள் உயிரிழந்திருப்பதும் பல குடும்பங்கள் புலம்பெயர்ந்திருப்பதும் காணிகளை உறுதிப்படுத்துவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. 

தற்போது சிறுபோக நெற்செய்கையில் உரத்திற்குப் பதிலாக பணம் வழங்கப்படுவதன் காரணமாக காணி உரிமையாளர்களே பணத்தினைப் பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதன் காரணமாக உண்மையான காணி உரிமையாளர்களை கண்டறிவதில் அதிகாரிகள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X