2025 ஜூன் 02, திங்கட்கிழமை

'கஜனின் குடும்பத்துக்கு குறை வீட்டைக் கொடுத்து அரசாங்கம் ஏமாற்றியது?'

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

சகோதரரின் மரணத்துக்குப் பின்னர் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில், வீடு மாத்திரமே  நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் சகோதரி, குறித்த வீடு எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே  காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்துக்கு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட வீடு, நேற்று முன்தினம் (29) கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து நடராஜா கஜனின் சகோதரி கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், குறித்த வீடு இராணுவத்தினரால் நிர்மாணித்து வழங்கப்பட்டதாகவும் கட்டுமானப் பணிகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டின் அத்திபாரம் தனது தாயாரால் இரண்டு இலட்சம் ரூபாய் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், வீட்டின் லிண்டர் வரையான கட்டுமானப் பணிகள், ஊரில் உள்ள மேசன்  ஒருவரைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகவும்  அதன் பின்னரான கட்டுமானப் பணிகளையே, இராணுவத்தினர் மேற்கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தனது தாய்க்கு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே, வீடு இவ்வாறான ஓர் அமைப்பில் வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வீட்டில் வெடிப்புகள் காணப்படுவதாகவும் வீட்டின்  நிலத்துக்குச் சீராக சீமெந்து பூசப்படவுமில்லையெனவும் பின் பக்கம் ஜன்னல்களுக்குக் கதவுகள் பொருத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் தனது தாய் ஏமாற்றப்பட்டு விட்டதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .