2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கைதி மீது தாக்குதல்: அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில்  5ஆவது சந்தேக நபரை, கடந்த 23ஆம் திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று (28) உத்தரவிட்டார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக, நேற்று  வரை (28) அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி இரவு  இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேக நபர், ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்று  (28) மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதங்கமையவே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து சந்தேக நபர்களும் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் சார்பாக ஆஜரான சடடத்தரணிகள், கிளிநொச்சி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகள் சிறைச்சாலையில் தொடர்ந்தும் தாக்கப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

இவ்வறிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில்  முதலாம் சந்தேகநபரை, சகோதர இனத்தைச் சேர்ந்த கைதி  ஒருவர், அநாகரீகமான  முறையில் நடத்தியதை அவதானித்த 5ஆம் சந்தேக நபர், சிறைக் காவலாளியிடம் முறையிட்டதையடுத்து, அவர்,  பிரச்சினையை சமரசம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

“பின்னர் இரவு வேளை, மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள், இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த 5ஆவது சந்தேகநபரின் காலில் இருந்த காயத்தில், சப்பாத்து காலால் மிதித்துக் கொண்டு, சரமாரியாக தாக்கியுள்ளனர்”

இதன்போது, குறித்த ஐந்தாம் சந்தேக நபர் நீதிமன்றில் கண்ணீர் விட்டு அழுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களாலும் தங்களாலும் மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என தெரிவித்த சட்டத்தரணிகள் குறித்த செயற்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமைவதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மனிதாபிமானமற்ற  முறையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், இந்நிலையில் அநுராதபுரம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுகின்றது என்றும் ஏற்கெனவே ஒரு மாத காலப் பகுதிக்குள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தடுத்து வைக்கப்படும் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும் ஏனைய கைதிகளாலும் இவ்வாறு தாக்கப்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்ட சட்டத்தரணிகள், மேற்படி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்தேக நபர் கடந்த 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையும் அநுராதபுரம் சிறைக்கூட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன், நேற்று  (28) மன்றில் ஒரு சுகதேகியாக ஆஜர்படுத்தப்படவில்லை என்றனர்.

மேலும், இது தொடர்பில், குறித்த ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் சாட்சிகளுக்கு இடையூறு செய்யாதிருக்கவும் மேலும் இவர்களை அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பில்லை என்றும் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க கட்டளையிடுமாறும், சட்டதரணிகள், மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏறறுக்கொண்ட நீதிமன்ற நீதிவான், இதற்கு முன்னரும் கைதிகள் தாக்கப்படுவது பாரபட்சமான முறையில் நடத்தப்படுவது  தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் வாய்மொழி மூலமாகவும் கடிதம் மூலமும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுயதீன விசாரணை ஒன்றினை நடாத்தி, மன்றுக்கு அறிக்கையிடுமாறும் கடந்த 23ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெயர் விவரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பதிவாளர் மூலம் எழுத்து மூல அறிவிப்பை விடுக்குமாறும் குறித்த கைதிகளை யாழப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் இதில் பாதிக்கப்பட்ட முதலாம் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்களை விசேட சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .