2025 ஜூன் 07, சனிக்கிழமை

கோவில், குளம் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டியது

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டு வந்த மணற்குளம், சிவன் கோவில் காணிப் பிரச்சினை, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் தீர்த்துவைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டத்தில், நேற்று (25) நடைபெற்ற கூட்டத்திலேயே, குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டு வந்த மணற்குளம், சிவன் கோவில் காணிப் பிரச்சினை தீர்க்கப்படாமல், இழுபட்டு வந்தது.

இந்நிலையில், இறுதியாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில், நேற்று (25) இறுதி முடிவு எட்டப்படுவதற்காக, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டத்தில் கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கமக்கார அமைப்புகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆலயத்துக்கான காணியை குறிப்பிட்ட அளவு அளந்து கொடுப்பதற்கு, இருதரப்பும் இணக்கம் தெரிவித்தது.

இதற்கமைய, ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு காலை 11.30 மணிக்கு அனைவரும் சென்றபோது, அங்கு இணக்கப்பாட்டுக்கு இணங்கி, காணி எல்லை போதாது என, ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

அதாவது, ஆலயத்தின் தேர் இழுப்பதற்கு, வீதியின் விஸ்தீரணம் தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தி வந்த வேளை,

கமக்கார அமைப்புகள், இணக்கப்பாட்டுக்கு எட்டப்பட்ட எல்லையை விட மேலதிகமாக, அதிகளவான மீற்றர் தூரத்தை ஆலயத்துக்காக விட்டுக்கொடுத்தனர்.

அதுவும் போதாது என ஆலய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பாரிய இழுபறிகளின் பின்னர் மாலை 4 மணியளவில் பிரதேச செயலாளர் ம.பிரதீபனின் முயற்சியால், நிலஅளவைத் திணைக்களமும் பொலிஸார் கமநலசேவை திணைக்கள உத்தியோகத்தர்களும், மக்கள் முன்னிலையில் கோவிலின் தேவைக்கான காணியை எல்லைப்படுத்தி, தூண்போட்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.

பிரதேச செயலாளரின் இந்த முயற்சி காரணமாக, இருதரப்பும் இணக்கத்துக்கு வந்து, சமரசத்துடன் நீண்டகாலக் காணிப் பிரச்சினை, தீர்வுக்குக் கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .