Niroshini / 2021 ஜூன் 30 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதற்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
அத்துடன், கௌதாரிமுனை கடலட்டை பண்ணை விவகாரம், ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது இந்தியாவுக்கு கூட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது எனவும், அவர் கூறினார்.
கிளிநொச்சி - கௌதாரிமுனை பகுதியில் உள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக, இன்று (30), அப்பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்ட சிறிதரன் எம்.பி, நிலைமைகளை ஆராய்ந்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் - பாசையூர் மீனவர்களும் கிளிநொச்சி - கௌதாரிமுனை மீனவர்களும். கடலட்டை வளர்ப்புக்காக முன்வைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையில், இப்பொழுது சீனர்கள் கடலட்டை வளர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனவும் குற்றஞ்சாட்டினார்.
இயற்கையாகவே கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்துவிட்டு,, செயற்கையாக வளர்க்கப்படும் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல், கடலட்டைகளுக்கும் வைத்து, அவற்றை விரைவான வளர்ச்சியடைய செய்து, அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
'இவற்றை பார்க்கும்போது, சீனாவுக்கு கடலட்டை ஏற்றுமதி செய்யப்படும் செயற்பாடாகத்தான் தெரியும். ஆனால், உண்மையில் இதன் பின்னணியில், பாரியளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன.
'சீனா தற்பொழுது கால்பதித்துள்ள இடங்கள் அனைத்தும் முக்கியமான கேத்திர நிலையங்களாகவே உள்ளன. இவ்வாறான விடயம் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது இந்தியாவுக்கு கூட பாரிய அச்சுறுத்தலை வழங்குகின்ற செயற்பாடாக காணப்படுகின்றது' என்றும், சிறிதரன் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவை வழிந்து சண்டைக்கு இழுக்கின்ற மற்றும் இந்தியாவை கண்கானிக்கின்ற செயற்பாடுகளை துரிதமாக சீன அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் கூறினார்.
இதேவேளை, குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக, எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026