2025 ஜூன் 25, புதன்கிழமை

சிற்றூழியரை தாக்கியதைக் கண்டித்து பணி பகிஸ்கரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சனிக்கிழமை (12) இரவு கடைமையில் இருந்த சிற்றூழியர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்ட இருவர், சிற்றூழியர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள், ஞாயிற்றுக்கிழமை (13) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொது வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் மதுபோதையில் வருகை தந்த இருவர், ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.

இதன்போது வைத்தியர் இல்லாத நிலையில் இரவு நேர கடமையில் இருந்த சிற்றூழியர்களிடம் மதுபோதையில் வருகை தந்த இருவரும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் திடீரென சிற்றூழியர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த சிற்றூழியர் காதுப்பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இச்சிற்றூழியர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஏனைய சிற்றூழியர்கள், நீதி கோரி, ஞாயிற்றுக்கிழமை (13) காலை மன்னார் பொது வைத்தியசாலையின் முன் பதாதைகளை ஏந்தியவாறு பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையினால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் உடன் வைத்தியசாலைக்குச் சென்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சிற்றூழியர்களுடன் கலந்துரையாடினர்.

மேலும், மன்னார் வைத்தியசாலைக்கு வருகை தந்த மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் சிற்றூழியர்கள், தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தினர்.

பிரச்சினைகளை கேட்டறிந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர், சிற்றூழியரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததோடு மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரவு நேரங்களில் மேலதிக பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
 
இதனைத் தொடர்ந்து சிற்றூழியர்கள், பணி பகிஸ்கரிப்பை கைவிட்டு தமது கடமைகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .