2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தென்பகுதி மீனவர்களை குடியேற்றுவதற்கு எதிராக நடவடிக்கை

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (13) மதியம் சிலாபத்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


மன்னார் மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராமத்தில் காணி கொடுத்து அவர்களைக் குடியேற்றம் செய்து அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அரசும், அரச அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக தென்னிலங்கை மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் மேற்கொண்டு வரும் சட்ட விரேத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் மித மிஞ்சிய வருகை போன்ற நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் மீண்டும் குறித்த நடவடிக்கை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனம் ஆகியவற்றின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றினைத்து இன்று (13) மதியம் 1.30 மணிக்கு சிலாபத்துறைப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டது.

எனினும், கிராம அலுவலகர் ஊடாக முசலி பிரதேச செலயாளர் செல்லத்துரை கேதீஸ்வரனினால் குறித்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலமிடம் தெரிவிக்கப்பட்டது.

முசலி பிரதேசச் செயலாளாருக்கும் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் சென்ற குழுவினருக்கும் இடையில் முசலி பிரதேசச்செயலகத்தில் விசேட சந்திப்பு, இன்று (13) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது முசலி பிரதேச செயலாளர், குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் எதிர்வரும் 1ஆம் திகதிக்கு முன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் 1ஆம் திகதிக்கு முன் தென்பகுதி மீனவர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டு வாடிகளையும் தான் முன் நின்று அகற்றித்தருவதாக உறுதியளித்தார்.

மேலும், தென்பகுதி மீனவர்களைக் காயக்குழியில் மீள் குடியமர்த்துவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கஜிபாமில் வசித்த 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த தென்பகுதி மீனவர்கள் இருந்தால் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்து உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தி உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

பிரதேச செயலாளரின் உறுதிமொழியை அடுத்து சிலாபத்துறை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மகஜர் கையளிக்கப்பட்டது. 

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் என்.எம்.ஆலம், மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகஜர் கையளிக்கும் நிகழ்வில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக ;கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் ஆகியோர் மகஜர் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடற்தொழில் நீரியல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கும் வகையில்  மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க  சமாச தலைவர் என்.எம்.ஆலமினால் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X