2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க குழு நியமனம்

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குழுவொன்றை நியமித்துள்ளார்' என கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர்  நாயகம்எம்.சி.எல் பெர்ணான்டோ தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை(25) இடம்பெற்ற கொக்கிளாய் களப்பை பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட பணிப்பாளரிடம் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கே அதிகமான மீனவர்கள் இடம்பெயர்ந்து சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் இருந்தே மீனவர்கள் அதிகளவில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் சென்று தங்களது தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று நீர்கொழும்பு வாழ் மீனவர்கள் சிலவேளைகளில் மன்னார் மாவட்டத்துக்ச் சென்று மீன்பிடி நடவடிக்ககைளில் ஈடுபடுவதும் வழமை. இந்த நடவடிக்கையானது பாரம்பரிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.

யுத்தத்துக்கு முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அன்று முதல் இன்று வரை இந்தச் செயற்பாடுகளுக்கு குறித்த பகுதிகளில் வாழும் மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மீன்பிடி அமைச்சர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து அந்தந்த பகுதிகளிலுள்ள மீனவ சங்கங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இந்தக் குழு கலந்துரையாடவிருக்கின்றது' என்றார்.

'யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான சிறந்த சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று தொழிலில் ஈடுபடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்நடவடிக்கையை கட்டுப்படுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது. எனினும் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போது அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை மீன்பிடி அமைச்சரும் திணைக்கள அதிகாரிகளும் இந்த இடம்பெயர் மீனவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X