2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தன்னைத் தாக்கியவர் சுதந்திரமாக நடமாடுவதாக இளைஞன் கவலை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், அட்ம்பன் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12) இரும்புக் கம்பியினால் பலமாகத் தாக்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன், தன்னைத் தாக்கிய நபருக்கு எதிராக அடம்பன் பொலிஸார், இதுவரை சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளப்படவில்லையெனக் கவலை தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அடம்பம் சகாய வீதியைச் சேர்ந்த எம்.பிரேம் குமார் (வயது-35) என்ற இளைஞனைக் கடந்த வெள்ளிக்கிழமை (12) காலை அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரிதொரு நபர், கூறிய இரும்புக் கம்பியினால் கடுமையாகத் தாக்கிய நிலையில் எம்.பிரேம் குமார் என்ற இளைஞன் கடுமையான காயங்களுக்குள்ளாகினார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் உடனடியாக நண்பர்களின் உதவியுடன் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 
தலையில் காயம் மற்றும் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்கியதாக கூறப்படும் அப்பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை அடம்பன் பொலிஸார் கைதுசெய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவரே தன்னைத் தாக்கியதாகவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அழுத்தத்தின் காரணமாகவே தன்னைத் தாக்கிய நபரைப் பொலிஸார் விடுதலை செய்ததாகவும் காயமடைந்த இளைஞன் கவலை தெரிவித்தார்.

இதேவேளை, கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த 3 தினங்களாக சிகிச்சை பெற்று வரும் இவ்இளைஞனை, மன்னார் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் இதுவரைப் பார்வையிடவில்லை எனத் தெரிய வருகின்றது.

சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கை பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே குறித்த நபர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னார் வைத்தியசாலை தரப்பினர் குறித்த இளைஞன் அனுமதிக்கப்பட்ட விடையம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கவனத்துக்குக்கொண்டுவராததன் காரணத்தினாலேயே சட்ட வைத்திய அதிகாரி அங்கு சென்று பார்வையிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்விடையம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு கேட்ட போது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆதரவாளர்கள் இருவருக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை மோதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காயமடைந்த அடம்பன் சகாய வீதியைச் சேர்ந்த எம்.பிரேம் குமார் (வயது-35) என்ற இளைஞன் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது அவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞனின் மருத்துவ அறிக்கை கிடைத்ததன் பிரகாரம் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

நாங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் அடிபணியாது எமது கடமைகளைச் சரியான முறையில் மேற்கொள்ளுகின்றோம் எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X