2026 மே 02, சனிக்கிழமை

‘தமிழ் உறுப்பினர்களுக்கு சிங்கள பொலிஸாரையே பிடிக்கும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

 

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், சிங்கள பொலிஸாரின் பாதுகாப்பையே கோருவதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

அத்துடன், அவர்களுக்கு தமிழ் பொலிஸார் மீது நம்பிக்கையீனம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி - அம்பாள்குளம் பாடசாலையில், நேற்று (30) நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ் பொலிஸாரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவது கிடையாதெனவும், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, இந்தப் பிரதிநிதிகளுக்கு நம்பிக்கை இல்லாதததே, இதற்கு காரணமெனவும் குறிப்பிட்டார்.

மேலும், மக்களிடம் அரசியல்வாதிகள் உண்மையை பேசுவது கிடையாதெனத் தெரிவித்த அவர், அவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்களுக்காக தவறான கருத்துகளையே, மக்கள் மத்தியில் பேசிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, வடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் ஒற்றுமையாக, இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தனது நோக்கமெனத் தெரிவித்ததுடன், அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அபிவிருத்தி கொண்டுவர முயல வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இங்கு வாழ்கின்ற மக்களின் மனநிலைகளை தான் அறிந்து கொண்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .