2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை’

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்கள்,  தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ   ஆண்டகை தெரிவித்தார்.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா, ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசரக் கலந்துரையாடலொன்று, மடு திருத்தலத்தின் மண்டபத்தில், நேற்று (10) முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தாங்கள் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலுடன்  வாழ்வதனால், அதற்கு ஏற்றவாறு சுகாதார பாதுகாப்புடனும் அந்தக் கட்டுப்பாடுகளுடனும் தான் இந்த விழாவை கொண்டாட வேண்டி இருக்கின்றெதென்றார்.

எனவே, இந்தமுறை தங்களுக்குத் தங்கும் வசதிகள் ஓர் அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இருக்கும் வீடுகளில் தங்கலாம் என்று கூறினாலும் அந்த வீடுகள் எல்லாம் ஏற்கெனவே மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆகையால் யாரும் வந்து வீடுகளில் தங்கக் கூடிய வசதிகள் இல்லையெனவும் கூறினார்.

அத்துடன், இம்முறை கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நீங்கள் தனியாக வாகனங்களில் வரும் போது வாகனங்களில் வருகின்றவர்களின்   பெயர்கள்  அவர்களின் அடையாள அட்டை இலக்கம், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து, பட்டியலிட்டு கொண்டு வர வேண்டுமெனவும் கூறினார்.

மேலும் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டுமெனவும், மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.

“மேலும், திருத்தலத்தைச் சுற்றி வருவதற்கு  8 நுழைவாயில்கள் உள்ளன. நுழை வாசல் ஊடாக ஆலயத்துக்குகு வருகின்றவர்கள், சிறிய பயணப்பொதிகளுடன் மட்டுமே வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்குவார்கள்.

“எனவே, போக்குவரத்து சேவையூடாக வருபவர்கள் சிறு பொதிகளுடன் வாருங்கள்.  தனியார் வாகனங்களில் வருபவர்கள் அவர்களுடைய வாகனங்களிலேயே அந்தப் பொருள்களையும் பயணப்பொதிகளையும்   வாகனத்தில் வைத்து விட்டு,  வழிபாட்டு தலத்துக்கு வரலாம்” எனவும், அவர் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 14ஆம் திகதி  மாலை, பேஸ்பர்  வழிபாட்டுடன் திருப் பவணியையும் நடத்த  ஆலோசித்து இருப்பதாகத் தெரிவித்த அவர், “ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று,  கண்டி மறைமாவட்ட ஆயர்  தலைமையில், காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும் அதன் பிறகு வழமையான திருச்சொரூப பவணி  இடம்பெறும்” எனவும் கூறினார்.

அதன் பிறகு,   திருப்பயணிகளுக்காக  மேலும் மூன்று திருப்பலிகள் அந்த நாளிலேயே ஒப்புக் கொடுக்கப்படுமெனவும், மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .