2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு மீள் குடியேற்ற அமைச்சு உதவ வேண்டும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மீள் குடியேற்ற அமைச்சு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மீள் குடியேற்ற மற்றும் புனர்நிர்மான அமைச்சின் செயலாளர் சிவஞானசோதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் கொழும்பில் உள்ள அமைச்சின் செயலகத்தில் விசேட சந்திப்பென்று, நேற்று வெள்ளிக்கிழமை (12) காலை நடைபெற்றுள்ளது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி விடையத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விசேட சந்திப்பின் போது  பல்வேறு வேளைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உரிய முறையில் அமைய வேண்டும் எனவு வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு, அந்த மக்களுக்கான நிவாரணம் குறிப்பாக இறந்தவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான வழங்கப்படுகின்ற நிதி உதவியினை ஒரு இலட்சம் ரூபாவில் இருந்து அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும,; இடம்பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் மீண்டும் தாயகம் திரும்புகின்ற போது அந்த மக்களுக்கு சொந்தக் காணிகள் இருந்தால் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதற்கும், காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்து அந்த மக்களுக்கு 06 மாதங்களுக்கான உலர் உணவு வசதிகளையும் உடன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, அம்மக்களுக்கான அடையாள அட்டை மற்றும் அவர்களின் கல்வித் தகமைகளுக்கு அமைவாக அரச வேலைவாய்ப்பு, சுய தொழில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வழியுறுத்தும் வகையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்புகின்ற மக்களின் நலனை கருத்தில்கொண்டு அந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான வரைபு ஒன்றைத் தாம் தயாரித்துள்ளதாகவும் மிக விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலில் அதனை நடை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகம், பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தப்படும் என மீள் குடியேற்ற மற்றும் புனர்நிர்மான அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X