2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதீடு மீண்டும் தோல்வி: சபையை இழக்குமா கூட்டமைப்பு?

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா  வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும், இன்று (07) தோற்கடிக்கப்பட்டது.   

வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில், இன்று நடைபெற்றது.  

கடந்த மாதம் இடம்பெற்ற அமர்வில், சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்  முன்வைக்கப்பட்ட நிலையில், அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டு இந்தது.  

இந்நிலையில், இன்றையதினம், அது மீளவும் முன்வைக்கப்பட்டது. இதன்போது, மக்கள் சார்பான வேலைத்திட்டத்துக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

குறிப்பாக, இந்த  வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.சஞ்சுதன் தெரிவித்தார். அவரது கருத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் முகுந்தன் வழிமொழிந்தார். 

அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பால்,  வரவு-செலவுத் திட்டம், வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.   
அந்தவகையில்  வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  

 ஆதரவாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர். இதனால், 9 மேலதிக வாக்குகளால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், இரண்டாவது முறையாகவும்   தோல்வியடைந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி சட்டங்களின் படி, பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, வரவு-செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற இருந்த போது, ஊடகவியலாளர்கள் குறித்த அமர்வு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக, தவிசாளரிடம் தொலைபேசி ஊடாக அனுமதி பெற்றிருந்தனர். 

எனினும், சபையில் தொலைபேசி பாவனை தொடர்பான குழப்பம் ஏற்பட்டபோது, பெதுஜன பெரமுன உறுப்பினரொருவர், ஊடகங்கள், வீடியோ பதிவு செய்யும் போது, "தொலைபேசி ஏன் பயன்படுத்த முடியாது? உங்களால் முடிந்தால் அவர்களை வெளியில் செல்லுமாறு கூறுங்கள்" என, தவிசாளரை பார்த்து கேட்டார். 

 "முன் அனுமதி பெறவில்லை, எனவே ஊடகங்கள் வெளியேற வேண்டும்" என,  தவிசாளர் தெரிவித்தார். எனினும், ஊடகவியலாளர்கள், "தொலைபேசியில் அனுமதி கேட்டோம்" என தெரிவித்தனர். 

எனினும் ஊடகங்களை கூட்டம் முடிந்ததன் பின்னர் சந்திப்பதாக ,தவிசாளர் கூறியதை அடுத்து, ஊடகவியலாளர்கள் வெளியேறிய பின்னர், வரவு-செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .