2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முள்ளிக்குளம் கிராம காணி விரைவில் விடுவிக்கப்படும்: செல்வம் எம்.பி

George   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இடம் பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை செலுத்தவில்லை.

எனினும், புதிய அரசாங்கத்தினால் முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட்டு மக்களிடம் வெகு விரைவில் கையளிக்கப்படும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரச படைகளினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு, வியாழக்கிழமை  கூறினார்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பலனாக புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் இந்த நாட்டில் முப்படையினர் பொது மக்களின் காணிகளை அபகரித்து இருந்தால் குறித்த காணிகளின் விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்கமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

ஏற்கெனவே நாங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் குழுவுக்கு மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்களம் கிராம மக்களின் காணிகளை கடற்படையினர் அபகரித்துள்ளமை தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்துள்ளோம்.

தற்போது குறித்த விடையம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நாங்கள் சந்திக்கின்ற போது வெகு விரைவில் முள்ளிக்குளம் கிராமம் கடற்படையினரிடம் இருந்து விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே போன்று கேப்பாப்புலவு காணி தொடர்பாகவும் நாங்கள் பேசியுள்ளோம். எனவே முள்ளிக்குளம் மற்றும் கேப்பாப்புலவு காணிகள் படையினாரினால் அபகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும், குறித்த காணிகள் மக்களினுடையது என ஆதாரத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம்.

எனவே குறித்த காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகின்றது.
நாடாளுமன்றத்தில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் வழுவாக முன் வைத்துள்ளோம்.

குறித்த காணிகள் தொடர்பாக ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ள விடயங்களையும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம்.
எனவே வெகு விரைவில் குறித்த காணிகள் விடுவிக்கப்படும். அதற்கான சகல முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X