2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் இறைச்சிக்கடையில் மோசடிகள்

Gavitha   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில், நிர்னயிக்கப்பட்ட விலைப்பட்டியலுக்கு மேலாக அதிக விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மாட்டிறைச்சி நுகர்வோர் மன்னார் நகரசபை செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் சந்தை மற்றும் மூர்வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலே, இவ்வாறான மோசடிகள் அதிகளவில் இடம்பெறுவதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமையால், அந்த விற்பனை நிலையங்கள், நகர சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

அந்த வகையில், மன்னார் நகர சபையினால் மாட்டு இறைச்சி விற்பனை விலையாக ஒரு கிலோகிராம் தனி இறைச்சி 450 ரூபாய்க்கும் ஒரு கிலோ முள்ளுடன் கூடிய இறைச்சி 400 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் ஈரல் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்புடைய விலைப்பட்டியல் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்படுவதுமில்லை.

எனினும் தற்போது, குறித்த மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில், ஒரு கிலோ தனி இறைச்சி 600 ரூபாய்க்கும், முள்ளுடன் கூடிய இறைச்சி 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஈரல் 1,000 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் இறைச்சி நிறுவைகளிலும் மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1 கிலோகிராம் இறைச்சியை கொள்வனவு செய்தால் அதில் 750 கிராம் மாத்திரமே உள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக, மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்டிடம் வினவிய போது,

'இது தொடர்புடைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகளில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குரிய நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும். அதனை மீரும் விற்பனை நிலைய உரிமையாளர்களின் கடைகள் மூடப்படும்.' என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X