2025 ஜூலை 16, புதன்கிழமை

வட்டுவாகல் காணிகளை விடுவிக்ககோரி போராட்டத்துக்கு முஸ்தீபு

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல்பகுதிகளில் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நாளை மறுதினம் (19)  முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர் காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் குறித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் உள்ளன.

காணிகளை விடுவிக்குமாறும் கால்நடைகளை மீட்டுத்தருமாறும் அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதும்,  காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவீகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தற்போது, கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதனை விடுவித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு உரியதரப்புக்கள் செவிசாய்க்காத நிலையில், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ள கடற்படைமுகாம் முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் முள்ளிவாய்க்கால் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி முடிவுகளை குறித்த மக்கள் எடுத்துள்ளனர்.

கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளும் இறுதியுத்தம் இடம்பெற்ற பகுதியாகக் காணப்படுவதுடன் இப்பகுதிக்குள் பொதுமக்களின் பெருமளவான சொத்துக்களும்; கைவிடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 397 ஏக்கர் காணி தவிர ஏனைய அரச காணிகள் கடற்தொழில் பல்கலைக்கழகம் மற்றும் கடற்தொழில் பயிற்சி நிலையங்கள் என்பன அமையக்கூடிய இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X