2025 ஜூன் 07, சனிக்கிழமை

‘வன்னி ஆசிரியர்களின் சேவைக் காலத்தை உரியவாறு கணிக்கவில்லை’

சண்முகம் தவசீலன்   / 2018 ஜனவரி 14 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு அரச நியமனம் வழங்கப்பட்டு தாம் சேவையாற்றிய மூன்று வருடங்களைத் தமது சேவைக் காலத்துடன் சேர்க்காது, தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்ட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அடிப்படை வசதிவாய்ப்புகளற்ற அதி கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியர்களாகப் பணிப் புரிந்து வரும் தமது சேவைக் காலத்தில், மூன்று வருடங்களை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கருத்திற்கொள்ளாது, 3 வருடங்கள் குறைத்தே தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது ஆசிரியர் தரம் மற்றும் சம்பள ஏற்றம் போன்ற பல விடயங்களில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்குப் பாதிக்கப்பட்டவர்களால் பல தடவைகள் தெரியப்படுத்தப்பட்டும், தாம் அரச சேவையாற்றிய காலத்தில் மூன்று வருடங்களைக் குறைத்து தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

தமது சேவைக் காலத்தை உரிய முறைப்படி கணியுங்கள் எனத் தெரியப்படுத்தப்பட்ட போதும் செய்யலாம், பார்க்கலாம், காலப்போக்கில் செய்யலாம் எனக்கூறப்பட்டதே தவிர, தற்போது வரை தமது சேவைக் காலம் உரிய முறைப்படி கணிக்கப்படாது மூன்று வருடங்கள் கழித்தே கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கூட, தாம் சேவையாற்றிய காலத்தை தமது சேவைக் காலத்தை உரிய முறைப்படி கணித்து தமது பிரச்சினையைத் தீர்க்க அக்கறை கொள்ளவில்லை என, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வன்னிப் பகுதிப் பாடசாலைகளில், யுத்த காலங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிலவியபோது கடந்த 13, 14 வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக தொடர் சேவையாற்றி வந்த தமக்கு, கடந்த காலங்களில் வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட வேளைகளில் வன்னிப் பகுதியைச் சேர்ந்த எமக்கு மட்டுமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது, திட்டமிட்டு புறக்கணித்து ஒதுக்கப்பட்டு வந்தன.

இறுதியாக வன்னிப் பகுதியைச் சேர்ந்த நாம் அனைவரும், வவுனியா - செட்டிகுளம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, கடந்த 2009ஆம் ஆண்டு வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர ஆசிரியர் நியமனத்தில்கூட, வடமாகாணக் கல்வி அமைச்சால் அப்போது வன்னிப் பகுதியைச் சேர்ந்த எவருக்குமே ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது புறக்கணித்து ஒதுக்கப்பட்டோம்.

முகாம்களில் இருந்து மீள்குடியேறிய பின்னர் வடமாகாணக் கல்வி அமைச்சின் முன் எம்மைப் புறக்கணித்தமையை சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரி பலதடவைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததன் விளைவாக, கடந்த 01.07.2013இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி, வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் எனும் நியமனம் வழங்கப்பட்டது.

அப்போது எமது அரச நியமன முதல் நியமனத் திகதியும் 01.07.2013 என சகல பதிவுகளிலும் இடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மூன்று வருடங்கள் குறைக்கப்பட்டு 01.06.2016இல் இருந்தே எமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .