2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்படாமையால் பயனாளிகள் அதிருப்தி

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்களுக்கான நிதியை பயனாளிகளுக்கு உரிய முறையில் வழங்கப்படாமையால் அதிகமான வீட்டுத் திட்ட பயனாளிகள் மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்கு நாளாந்தன் சென்று வருகின்ற போதும், பணம் உரிய முறையில் கிடைக்காத நிலையில் தாம் ஏமாற்றத்துடன் செல்வதாக, பாதிக்கப்பட்ட பயனாளிகள்   கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளான மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 3,285 வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது, தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிடப்பட்ட வீட்டின் ஒவ்வொரு கட்டுமானத்துக்கும் பகுதி பகுதியாக   நிதியை பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்ற திட்டத்திலே இவ்வீடமைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் பெரும்பாலான பயனாளிகள் கடன்பட்டு குறிப்பிட்ட மட்டம் வரைக்கும் கட்டடங்களை அமைத்த பின்னரும், தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிட்ட நிதியை விடுவிக்காமையால் வழங்கப்பட்ட தங்கள் வீடுகளை பூர்த்தி செய்ய முடியாது தவிப்பதுடன் கட்டம் கட்டமாக விடுவிப்பதாக தெரிவித்து, நிதியையும் விடுவிக்காததால் பெரும் சிரமங்களை பயனாளிகள் எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், வருகின்ற மாதங்களில் மழைக் காலம் என்பதால் நிதி இது வரை விடுவிக்கப்படாமையால், அறை குறை பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் இருந்து மழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புதிய வீடு அமைப்பதற்காக பல வருடங்கள் வாழ்ந்த குடிசை வீடுகளையும் தற்போது அகற்றி உள்ளதாகவும் தற்போது பழைய வீடும் இல்லாமல் புதிய வீடும் பூரணப்படுத்தப்படாத நிலையில் துன்பப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட இவ்வீட்டுத் திட்டங்களுக்கு தலா 5 இலட்சம்  ரூபாய் மானியமாக கட்டம் கட்டமாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


அத்துடன் இந்த ஆண்டு மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 55 மாதிரி கிராமங்களில் 1536 வீடுகளும், நானாட்டான் பிரிவில் 10 மாதிரி கிராமங்களில் 216 வீடுகளும், முசலி பிரிவில் 5 மாதிரி கிராமங்களில் 103 வீடுகளும், மாந்தை மேற்கு பிரிவில்11 மாதிரி கிராமங்களில் 258 வீடுகளும் மொத்தம் 81 மாதிரி கிராமங்களில் 2113 வீடுகளும் நிர்மானிக்கப்ட்டு வருகின்றன.


இவ்வீட்டுத்திட்டங்களுக்கு தலா 7  இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 139 மாதிரி கிராமங்களிலும் 3285 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 


எனவே எதிர் வரும் நாள்களில் மழைக் காலம் ஆரம்பமாக இருப்பதனாலும் ஆரம்ப கட்ட வீட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள நுண் நிதி நிறுவனக்களிடம் வாங்கிய கடன் தொகை அதிகரித்து செல்வதாலும் சம்பந்தட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உடனடியாக குறித்த நிதியை விடுவித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X